கனடா முழுவதும் கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் ஜனவரியில் மிக அதிக வேலையின்மை வீதம் பதிவாகியுள்ளதாக கனடா புள்ளிவிவரவியல் துறை தெரிவித்துள்ளது.
கனேடிய தொழில்துறையினர் குறித்து கனடா புள்ளிவிபரத்துறை ஜனவரி மாதத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தற்போது குறைந்து வருகிறது.
எனினும் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக ஒன்ராறியோ ஜனவரியில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியது. அத்தியாவசியமற்ற சில்லறை வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்திலும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய மாகாணங்களும் உணவு, பொழுதுபோக்கு வசதிகள், தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் சில்லறை வணிகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன.
இவ்வாறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலேயே ஜனவரியில் வேலையின்மை வீதம் அதிகரித்துள்ளது.
எனினும் ஜனவரியில் ஏற்பட்ட வேலை இழப்புக்கள் பெரும்பாலும் பகுதிநேர வேலை இழப்புக்களாகவே பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரத் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 213,000 பேர் பகுதிநேரம் மற்றும் முழு நேர வேலைகளை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரியில் வேலையின்மை 9.4 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 10.2 சதவீதமாக இருந்து பின்னர் அதிகரித்தது.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களிலேயே அதிக வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.
நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடாரிலும் வேலைவாய்ப்பு குறைந்தது.
ஆனால் ஆல்பர்ட்டா, மனிடோபா, நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஜனவரியில் வேலை வாய்ப்பு வீதம் உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்காட்செவன் மற்றும் நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் வேலைவாய்ப்பு வீதம் ஏற்ற-இறக்கமின்றி சீராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் 20 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட இளைஞர்களே இரு மடங்கு அதிகமாக வேலை இழப்பை சந்தித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பகுதி நேர பணியாளர்களாவர்.
அத்துடன், 25 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்கள் அதே வயதுகளையுடைய ஆண்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் வேலை இழந்துள்ளனர் எனவும் கனடா புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது.